நானும் பதிவிடுகிறேன்

அதீத வேலையும், தேர்தல் பொருட்டு உடையும் பிம்பங்களும், வாக்குறுதிகளும் மனச்சோர்வை அளிக்கின்றன. கையாலாகாத்தனமும் வோட்டுகளின் பலவீனமும் இருக்கும்வரை இந்தியா வளரப்போவதில்லை. இதைப்பற்றி எழுதியும் ஒரு பலனும் இல்லை.

எழுதுவது ஏன் என்ற கேள்வியும், எதை எழுதுவது என்பது பற்றி மீண்டும் ஒருமுறை சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன். பலர் சிறப்பாக எழுதுகின்றனர் அதை படித்துக்கொண்டிருப்பதே இன்பம் அளிக்கின்றது.

சமீபத்தில் பார்த்த படங்களில் டில்லி 6, வெண்ணிலா கபடி குழு, லாடம் நன்றாக இருந்தன. லாடம் நல்ல படம் என்று சொல்லமுடியாத வரிசை ஆனால், சார்மிக்காகவும் வித்தியாசமான உருவாக்கத்திற்காகவும் பார்க்கலாம்.

ஆனந்த தாண்டவம் பாடல்கள் பற்றி ஆந்திர நண்பர் ஒருவர் கேட்டதால் கேட்டுப்பார்த்தேன். நன்றாக உள்ளன.

தேவனின் சிஐடி சந்துரு நாவல் படித்தேன். அந்த காலத்திற்கு நன்றாக இருந்து இருக்கலாம். இப்போதைக்கு நேர விரயம். கதாநாயகன் இருந்த இடத்திலேயே எல்லாம் ஞானதிருஷ்டி போல கண்டறிகின்றான். கிழக்கு பதிப்பகம் வெளியீட்டில் படித்தேன்.

கிழக்கு பதிப்பகம் ஒரு புதிய திரட்டியை ஆரம்பிக்கலாம்(எனக்கு தெரியவில்லை, இருந்தாலும் இருக்கலாம்). ட்விட்டரை முழுவதும் வியாபித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையுடன் செயல்ப‌டுவதாக தோன்றுகின்றது. ஒரு கார்பரேட் நிறுவனம் போல்.

கொஞ்சம் வித்தியாசமான தலைப்பும் அங்கும் இங்கும் இருந்து மொழிபெயர்க்கும் திறமையும் இருந்தால், கிழக்கு பதிப்பகத்தில் ஒரு புத்தகம் எளிதில் எழுதிவிடலாம். அப்படியே பெயருக்கு முன் ரைட்டர் என்று போட்டு ஒரு இணையத்தளமும் ஆரம்பித்துக்கொள்ளலாம்.

இந்த வக்கீல் போலீஸ் பிரச்சினை இத்தோடு முடியப்போவதாக தெரியவில்லை. யார் பக்கம் நியாயம் இருக்கின்றது என்பது இவ்வளவு இடியாப்பச்சிக்கலாக இருந்தால், அதை தேர்தலில் பரிமாறுவது கடினம். எனவே எதிர்கட்சிகளுக்கு இந்த விஷயம் அவ்வளவு பெரிய அவல் அல்ல.

என் தங்கையும் காதலியும் அடிக்கடி இங்கு வந்து படிப்பதால், பொறுப்புடன் எழுதவேண்டி இருக்கின்றது. எழுதிய சிலவற்றை அவசரமாக அழிக்கவும் நேரிடுகின்றது. :)

சில பதிவுகள் படிப்பதை மற்றும் சிலபேரை ட்விட்டரில் தொடர்வதை நிறுத்தியபின் நாட்கள் நிம்மதியுடன் கழிகின்றன.

அன்னியநாட்டு வாழ்க்கையை சீக்கிரம் முடித்துக்கொண்டு வீடு திரும்ப நாளுக்கு நாள் கோரிக்கை வலுக்கின்றது. ஏடிஎம்மில் பின் நம்பருக்கு 6 எண்களுக்கு பதில் இந்தியா போல் 4 நம்பர்கள் அழுத்தியபோதே நானும் இந்தியா செல்ல தயாராகிவிட்டேன் என்பது தெரிந்துவிட்டது.

"வெளிநாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா"

ஆனால் பொருளாதாரத்தால் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் எந்த முடிவும் துணிச்சலாக எடுக்க முடிவதில்லை.

எப்போதும்போல் வடுவூர் குமார் அட்டகாசமாக எழுதிவருகின்றார். துபாயில் அவருக்கு பக்கத்தில் நாமும் இருப்பதுபோல் வாராவாரம் ஊர்சுற்றிக்காண்பிக்கிறார்.

http://madavillagam.blogspot.com

14 Comments:

  1. கிரி said...
    //லாடம் நல்ல படம் என்று சொல்லமுடியாத வரிசை ஆனால், சார்மிக்காகவும் வித்தியாசமான உருவாக்கத்திற்காகவும் பார்க்கலாம்//

    நானும் பார்க்கலாம் என்று இருக்கிறேன் (மேற்குறிப்பிட்ட இரண்டிற்காகவும்)

    //என் தங்கையும் காதலியும் அடிக்கடி இங்கு வந்து படிப்பதால், பொறுப்புடன் எழுதவேண்டி இருக்கின்றது. எழுதிய சிலவற்றை அவசரமாக அழிக்கவும் நேரிடுகின்றது. :)//

    ;-)

    //சில பதிவுகள் படிப்பதை மற்றும் சிலபேரை ட்விட்டரில் தொடர்வதை நிறுத்தியபின் நாட்கள் நிம்மதியுடன் கழிகின்றன//

    ஹா ஹா ஹா அதுல என் பதிவு இருக்க கூடாதுன்னு வேண்டிக்கிறேன்
    வடுவூர் குமார் said...
    என்னை ஞாபகம் வைத்துக்கொண்டதற்கு நன்றி.
    தேவனின் அந்த நூல் “நேர விரயமா?” - அதிசியமாக இருக்கு! ஒவ்வொருவர் டேஸ்ட் ஒருமாதிரி இருக்கும் -தவறில்லை.
    கிஷோர் said...
    //ஹா ஹா ஹா அதுல என் பதிவு இருக்க கூடாதுன்னு வேண்டிக்கிறேன்//

    கண்டிப்பா இல்லை கிரி. நீங்க எல்லாம் யாரு :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
    கிஷோர் said...
    வருகைக்கு நன்றி குமார் அண்ணா,

    //தேவனின் அந்த நூல் “நேர விரயமா?” - அதிசியமாக இருக்கு! ஒவ்வொருவர் டேஸ்ட் ஒருமாதிரி இருக்கும் -தவறில்லை.//

    அவ்வளவு பெரிய புத்தகத்தில் சந்துருவைத்தவிர அனைவரும் படு சூட்டிக்காக இருக்கிறார்கள். சந்துரு இருந்த இடத்தில் இருந்துகொண்டு பெரிய ஆள் போல பேசுவதெல்லாம் கொஞ்சம் காமெடியாத்தான் இருக்கு :)
    Unknown said...
    பதிவு அழகாக பத்திகள் பிரிக்கப்பட்டு
    எழுதிய விஷயங்களும் நல்லா இருக்கு.நான் எழுதிய புத்தக கண்காட்சி கட்டுரையில் வரும் சில வரிகள்:-

    //கிழக்குப் பதிப்பகம் மணிமேகலை பிரசுரம் போல்(மருதாணி இட்டுக் கொள்வது எப்படி?)ஆகி விட்டது.

    அம்பானி முதல் லூஸூ பையன்வரை
    புத்தகம் போட்டிருக்கிறார்கள்.அடுத்து நீதான் பாஸ் No.1 Blogger போன்ற தலைப்பில் ஒரு புத்தகம் வரலாம்.எக்கசக்கமான புத்தங்கள்.//
    கிஷோர் said...
    நன்றி ரவி. உங்களுடைய அந்த பதிவு எனக்கு மனப்பாடம். கிழக்கு பற்றி எழுதும்போது நீங்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. எழுத்தின் வலிமை :)
    சி தயாளன் said...
    //சில பதிவுகள் படிப்பதை மற்றும் சிலபேரை ட்விட்டரில் தொடர்வதை நிறுத்தியபின் நாட்கள் நிம்மதியுடன் கழிகின்றன//

    :-))))

    //
    ஆனந்த தாண்டவம் பாடல்கள் பற்றி ஆந்திர நண்பர் ஒருவர் கேட்டதால் கேட்டுப்பார்த்தேன். நன்றாக உள்ளன.
    //

    படத்தை எதிர்பார்க்கிறேன்..:-)
    கிஷோர் said...
    //படத்தை எதிர்பார்க்கிறேன்..:-)//

    நானும் நானும். வாத்தியாரின் கதையாச்சே. ஆனால் நான் இன்னும் படித்ததில்லை :(
    அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    //என் தங்கையும் காதலியும் அடிக்கடி இங்கு வந்து படிப்பதால், பொறுப்புடன் எழுதவேண்டி இருக்கின்றது. எழுதிய சிலவற்றை அவசரமாக அழிக்கவும் நேரிடுகின்றது. :)

    சில பதிவுகள் படிப்பதை மற்றும் சிலபேரை ட்விட்டரில் தொடர்வதை நிறுத்தியபின் நாட்கள் நிம்மதியுடன் கழிகின்றன.//

    அது சரி,
    அண்மையில் ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன்.
    எழுத்தாளரின் சிறுகதைகளைப் படித்துவிட்டு அவரது வாழ்க்கைத்துணை அவருடன் பலமுறை சண்டையிட்டதாகவும், ஊடல் கொண்டதாகவும் அல்லது முறைப்பைக் காட்டியதாகவும் சொன்னார்.
    அதை பற்றி கவலைப் பட்டால் எதுவும் எழுத முடியாது!
    முறைப்பைக் காட்டாமல் இருக்க முறைப்படி சொல்லிவிடுங்கள்!
    நதிமூலம் ரிசிமூலம் பார்த்தால் சீசன் முடிந்துவிடும்!
    தன்னிலை விளக்கத்துடன் ஒரு பதிவிடுங்கள்!
    எல்லா பதிவுகளிலும் அதற்கு தொடுப்பு கொடுங்கள்!
    கிஷோர் said...
    //முறைப்பைக் காட்டாமல் இருக்க முறைப்படி சொல்லிவிடுங்கள்!//

    ஏதேது அடி உதைக்கு வழி சொல்கிறீர்களே!! :)

    //தன்னிலை விளக்கத்துடன் ஒரு பதிவிடுங்கள்!
    எல்லா பதிவுகளிலும் அதற்கு தொடுப்பு கொடுங்கள்!//

    முயற்சி செய்து பார்ப்போம் :)
    *இயற்கை ராஜி* said...
    :-)
    கிஷோர் said...
    நன்றி இய‌ற்கை :)
    அறிவிலி said...
    //தேவனின் சிஐடி சந்துரு நாவல் படித்தேன். அந்த காலத்திற்கு நன்றாக இருந்து இருக்கலாம். இப்போதைக்கு நேர விரயம். கதாநாயகன் இருந்த இடத்திலேயே எல்லாம் ஞானதிருஷ்டி போல கண்டறிகின்றான். கிழக்கு பதிப்பகம் வெளியீட்டில் படித்தேன்//

    கல்கியின் (சரித்திரக் கதை அல்லாத) படைப்புகளை படித்ததுண்டா?

    இதெல்லாம் ஒல்ட் க்ளாசிக்ஸ்.ஒரே தராசில் அளவிட முடியாது.

    மெககனஸ் கோல்ட் படத்தை இப்போது பார்த்தால் போரடிக்கத்தான் செய்கிறது.
    கிஷோர் said...
    //இதெல்லாம் ஒல்ட் க்ளாசிக்ஸ்.ஒரே தராசில் அளவிட முடியாது//

    உண்மைதான்.

    //மெககனஸ் கோல்ட் படத்தை இப்போது பார்த்தால் போரடிக்கத்தான் செய்கிறது.//

    என் அப்பா ரொம்ப சிலாகித்து சொன்னதால் இந்த படத்தை பார்த்தேன். அந்த காலத்திலேயே அந்த க்ளைமாக்ஸ் காட்சியை மிக பிரம்மாண்டமாக அமைத்திருப்பார்கள். நல்ல ஒரு படம் தான்

    //கல்கியின் (சரித்திரக் கதை அல்லாத) படைப்புகளை படித்ததுண்டா?
    //

    ஓ படித்திருக்கேன். தியாகபூமி, அலைஓசை அப்புறம் ஆன்லைன் தயவுல கொஞ்சம் சிறுகதைகள். அவர் நடையே அலாதி சுவையானது.

    வருகைக்கு நன்றி அறிவிலி :)

Post a Comment





Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.