முதல் உலகப்போரின்போது ஒரு ருசிகர சம்பவம் நடந்திருக்கிறது. இந்த சம்பவம் எந்த அளவிற்கு உண்மை என்பது சற்று சந்தேகத்துக்குறியது. ஏனெனில் இந்த சம்பவம் அதிகாரப்பூர்வமாக எங்கும் குறித்துவைக்கப்படவில்லை.
1914 ல், பிரிட்டிஷ் படைகளுக்கும் ஜெர்மன் படைகளுக்கும் இடையே மேற்கு முனையில் போர் நடந்து கொண்டிருந்தது. பெல்ஜியத்தின் இப்ரெ என்ற இடத்தில் கிறிஸ்துமஸுக்கு சற்று முன்பு போர் நடந்துகொண்டிருந்தது.
போர், இரத்தம், பிணங்கள் என்று மனிதமனத்திற்கு ஒவ்வாத விஷயங்களில் முழுக்க முழுக்க தங்களை மறந்து போரிட்டுக்கொண்டிருந்த வீரர்கள், கிறிஸ்துமஸ் வந்ததும் தங்களை அறியாமல் கொண்டாட்ட மனப்பான்மைக்கு சென்றனர். இவர்களை கொண்டாட எதிரி வீரர்கள் விட வேண்டுமே!
ஆனால் இரு புற வீரர்களுக்கும் இதே மன நிலைமை இருந்ததால், இரு புற வீரர்களுக்கும் மனம் கொண்டாட்டத்தை நாடியது. முதலில் கொண்டாட ஆரம்பித்தது ஜெர்மன் படைகளே, ஜெர்மன் வீரர்கள் தங்கள் பதுங்கு குழிகளை அலங்காரப்படுத்தி மரங்களில் மெழுகுவர்த்திகளை கொளுத்தினர்.
மேலும் கிறிஸ்துமஸ் கேரல் பாடல்களையும் பாடி கிறிஸ்துமஸை கொண்டாடினர். இதைக்கேட்ட எதிர்தரப்பு ஸ்காட்டிஷ் வீரர்களையும் இந்த உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஜெர்மன் வீரர்கள் "Stille Nacht" பாடலை பாட ஸ்காட்டிஷ் வீரர்களோ அப்பாடலின் ஆங்கில வடிவம் Silent Night பாடலைப்பாடினர்.
ஒரு பாடல், இதயத்தை தொடும் இசை இரு எதிரிகள்(எதிர்கள் வேடம் பூண்டவர்கள்) இணைய வழிவகுத்தது.
அந்த ஜெர்மன் பாடல் இதோ
இதற்கு கொஞ்சம் மேலே போய் ஜெர்மன் வீரர்களும் ஸ்காட்டிஷ் வீரர்களும் விஸ்கி, சிகரெட், சாக்லெட் போன்றவற்றை தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.
தங்கள் குரோதங்கள் மறைந்து அன்பை பரிமாறிக்கொண்ட நேரம், தங்களால் கொல்லப்பட்ட வீரர்களின் நினைவு வந்தது இரு புற வீரர்களுக்கும். மறைந்த வீரர்களுக்கு இறுதி சடங்கு நடத்தினர். அப்போது சங்கிதம் 23 ம் அதிகாரத்தில் இருந்து ஒரு வசனத்தை வாசித்து இறுதி அஞ்சலி செலுத்தி இறைவனை வேண்டினர். அந்த வசனம்
The Lord is my shepherd. I shall not want. He maketh me to lie down in green pastures. He leadeth me beside the still waters. He restoreth my soul. He leadeth me in the path of righteousness for his name's sake. Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil.
தமிழில்,
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
இந்த கிறிஸ்துமஸ் போர்நிறுத்தம் மளமளவென மற்ற போர்முனைகளுக்கும் பரவியது. சில இடங்களில் இரு அணி வீரர்களும் கால்பந்தாட்டம் கூட ஆடியதாகவும் கூறப்படுகிறது.
அன்பை கொண்டாடும் கிறிஸ்துமஸ் வருக. உலகத்திற்கு மீண்டும் சமாதானம் தருக.
Feliz Navidad. Merry Christmas
லேபிள் கிறிஸ்துமஸ்
"பொதுவாக ஒரு கூட்டத்தில் கலப்பதென்பது எனக்கு எப்போதும் வேப்பங்காய் விஷயம்"
நான் முதல் முறை கலந்துகொள்ளும் பதிவர் சந்திப்பு இது. மேலே நீங்கள் படித்த வரிகள் என்னுடைய முந்தைய இடுகையில் இருந்து. அந்த வரிகளை மாற்றிக்காட்டிய அனைவருக்கும் நன்றிகள்.
முன்குறிப்பு: இதுதான் முதல் சந்திப்பு என்பதால், சில பெயர்களோ சுட்டிகளோ மாறியிருக்கலாம். தயவு செய்து பொறுத்துக்கொள்ளவும். பின்னூட்டத்தில் குட்டவும்
இந்த முறை மலேசியப்பதிவர் விக்னேஷ்வரன் வருவது இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது. எனவே அவருக்கு ஊரையும் அப்படியே சுற்றிக்காட்டும் நோக்கில், செந்தோசா என்னும் சிங்கைத்தீவில் இந்த சந்திப்பு அமைக்கப்பட்டிருந்தது.
நமக்கு எப்போதும் புதியவர்களை சந்திப்பது கொஞ்சம் கடினமான காரியமாக இருந்ததால்(கமெண்ட் கோவிந்து: இதுவே ஃபிகரா இருந்தா?) என்னுடன் வேலை செய்யும் இரு நண்பர்களையும் அழைத்து சென்றிருந்தேன். இந்த சந்திப்புக்கு செல்வது பற்றி அதிகம் திட்டமிடாமல் இருந்ததால் கிட்டத்தட்ட மதியம் ஊர்க்கார நண்பன் விஜய் ஆனந்தை அழைத்து என் வருகையை பற்றி சொன்னேன். அது முதல் ஒவ்வொரு அரைமணிநேரமும் என்னை அழைத்து தகவல்களை பரிமாறிக்கொண்டிருந்தார்.
என்னுடைய இரு நண்பர்களையும் அழைத்துக்கொண்டு செல்ல சற்று நேரமாகிவிட்டாலும், சம்பவ இடத்துக்கு சரியாக சென்று சேர்ந்தேன். செல்லும் வழியெல்லாம் நண்பர்கள் இருவரும் எங்கே எங்கே என்று அரித்தெடுத்துக்கொண்டு இருந்ததால் ஒரு மீட்டுக்கு செல்கிறோம் என்று சொல்லியிருந்தேன். அவர்கள் இருவரும் ஏதோ பெரிய மீட்டிங் என்று நினைத்து ஃபிகர் எல்லாம் வருமா என்றெல்லாம் கேட்டுக்கொண்டே வந்தனர். வரும் வழியெல்லாம் ஒரே பிகினிகளும் ஜோடிகளும் கடற்கரையோரம் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தன. ஹூம் நல்ல இடம் பார்த்தாங்கப்பா என்று நினைத்தபடியே வந்தேன்(பின்னர் விஜய் ஆனந்த், விக்னேஷுக்கு காட்டத்தான் இந்த இடம் என்று கூறினார். அதாவது ஊர் சுற்றிக்காட்ட என்றார்)
வந்தவுடன் விஜய் ஆனந்த், எங்களை வரவேற்றார். நானும் அவரும் கடலூர் என்பதால் கொஞ்சம் ஊர்க்கதை பேசியபடியே ஆரம்பித்தோம். அந்த நேரத்தில் துக்ளக் மகேஷும் வந்து இணைந்தார். எல்லோரும் அங்கே ஏற்கனவே செட்டில் ஆகிவிட்டார்கள் என்று கூறினார். சென்று பார்த்தபோது நிறையபேர் கையில் பீர் டின்களுடன் இருந்தபோது தெரிந்தது இவர் கூறிய செட்டில் விஷயம்.
என் நண்பர்களிடம் ஏற்கனவே மிரட்டி அழைத்து சென்றிருந்தேன். ஒரு வார்த்தை கூட உளறக்கூடாது. என்ன பேசுகிறார்கள் என்று கேட்டுவைத்துக்கொள்ளுங்கள், புரிந்தால் மட்டும் உங்கள் கருத்தைக்கூறுங்கள் என்றெல்லாம் மிரட்டியிருந்தேன். ஏனென்றால் இருவருக்கும் ப்ளாக் என்றால் என்னவென்றே தெரியாது. அதை ஏதோ புது வஸ்து போல் நினைத்துக்கொண்டிருந்தார்கள்.
அங்கிருந்தவர்கள் கையில் பீர் பாட்டில்களை பார்த்ததும், என் நண்பர் பாஸ்கி முதலில் அணை உடைந்தார். அடுத்து சேலம் பற்றி பேச ஆரம்பித்ததும், இன்னொரு நண்பரும் அணை உடைந்தார். இருவரும் புதிதாக சிங்கை வந்தவர்கள் என்பதால் இத்தனை தமிழ் நண்பர்களை பார்த்ததும் இருவரும் பேசி மகிழ்ந்தனர்.
அங்கு ஏற்கனவே, கோவியார்,மலேசிய பதிவர் விக்னேஷ்வரன், ஜோசப் பால்ராஜ், முகவை மைந்தன் ராம், ஜோ மில்டன், ஜோதிபாரதி, பாரி அரசு மற்றும் அவர் நண்பர் ராஜா, பதிவு வாசகர் மீனாட்சி சுந்தரம் (இவர் புதிய சட்டையில் மஞ்சள் கூட அழியாமல் போட்டு வந்திருந்தார்), கிரி (தலைவர் முதல்நாள் இரவு வேலை பார்த்திருந்ததால், ஒரு அரை மயக்கத்திலேயே இருந்தார்) மற்றவர்கள் பற்றி சரியாக நினைவில்லை. பின்னூட்டத்திற்கு பிறகு தேவைப்பட்டால் மீள்பதிவேற்றுகிறேன்.
சந்திப்பு நடந்த இடத்திற்கு அருகில் நிறைய பிகினிகள் சுற்றிக்கொண்டிருந்தன(ஹூம்ம்ம்). எனது முந்தைய இடுகையில் நான் கூட்டத்தில் கலப்பது கசப்பாக இருக்கும் என்று கூறியதை வைத்து ஜோசப் என்னை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். என்னைப்பார்த்து பலர் நான் மிக இளமையாக இருப்பதாக கூறினர்.(கமெண்ட் கோவிந்து: ஆமாம் ரெம்ப முக்கியம்)
என்னைப்பற்றி சில வார்த்தைகள் பேச சொன்னார்கள், மிகுந்த கூச்சத்துடன் பேச ஆரம்பித்தேன், சற்று நேரத்தில் சகஜமானேன். ஒரு பதிவர், நீங்க தானே இங்கே எங்கே IT Show நடந்தாலும்(கும்பல் கூடினாலும்) போய் பார்த்துவிட்டு எழுதுவீர்கள் என்றார். திருமணம் ஆகவில்லை என்றதும் ஜோசப், "நீ நம்ம ஆளுப்பா, இங்க வா" என்று அழைத்து அருகில் உட்காரவைத்து காப்பாற்றினார். என்னிடம் யாருடைய பதிவைப்படித்து நீங்கள் வந்தீர்கள் என்று கேட்டனர். அப்போது அது எனக்கு சரியாக நினைவிலில்லை. ஆனால் பின்னர் "கட்டுமானத்துறை" வடுவூர்குமார் பற்றி பேச்சு வந்தபோதுதான் நினைவில் வந்தது. அவரது பின்னூட்டங்கள் எனக்கு ஆரம்ப கட்டங்களில் உத்வேகமளித்தன.
துக்ளக் மகேஷும் தன்னைப்பற்றி அறிமுகம் செய்துகொண்டார்.
இந்நேரத்திலும் பிகினிகள் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தன. ஒருவன் கழுத்து வரை நீரில், அவனுடைய பிகினியை கழுத்தில் உட்காரவைத்து, அவனுடைய நண்பர்கள் புகைப்படம் எடுத்தனர்.
திடீரென்று அனைவரையும் பீர்களை சீக்கிரம் குடிக்கவோ அல்லது ஒளித்து வைக்கவோ உத்தரவு வந்தது. பின்புதான் தெரிந்தது, பதிவர் திண்டுக்கல் சர்தார்(அனுராதா கணவர்) அவரது மகன் குடும்பத்துடன் வந்தது. அனைத்து பதிவர்களும் அவரை சென்று வரவேற்றோம். ஏற்கனவே விக்னேஷ்வரன் நினைவுப்பரிசுகளை கொடுத்துவிட்டதால், எனக்கு இல்லையோ என்று நினைத்திருந்தேன், அப்போது திடீரென்று கூப்பிட்டு கொடுத்து காப்பாற்றினார். :)
சற்று நேரம் கழித்து சிங்கை நாதன் வந்து இணைந்துகொண்டார்.
மகேஷ் தான் கொண்டுவந்திருந்த சாக்லேட்களை கொடுத்து அனைவர் வாயையும் அடைத்தார். நிஜமாகவே அந்த சாக்லேட் சாப்பிட்டதும் பற்களுக்குள் சிக்கிக்கொண்டு சற்று நேரம் அமைதிகாக்க வேண்டியிருந்தது :)
அந்த கடற்கரை அருகே அனைவரையும் புகைப்படம் எடுக்க கோவியார் முயற்சித்தார். பாறைகள் மிக பாசியாக இருந்ததால் சில முறை கால் தவறி, அனைவரையும் கலவரப்படுத்தினார். அந்த சமயத்தில் யாரோ "அண்ணே கேமிரா பத்திரம்" என்றார்.
இதற்குப்பின் அனைவரும் மீண்டும் எங்கள் பழைய இடத்திற்கு சென்று சேர்ந்தோம். பிகினிகளின் ஆட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது.
திண்டுக்கல் சர்தார் அவர்களும், ஜோதிபாரதி அவர்களும் தாங்கள் எடுத்து வந்த வடை மற்றும் சுளியன்களையும் விநியோகித்தனர்.
பதிவர் விக்னேஷ்வரன் தனது வலைப்பதிவு பயணத்தை இனிய தமிழில் பகிர்ந்தார். தனது தமிழ் வளர்ச்சியையும், மலேசிய பதிவர்கள் பற்றியும் மலேசியாவில் தற்சமயம் தமிழின் நிலைமையையும் கூறினார்.
திண்டுக்கல் சர்தார் அவர்கள் தான் கடந்து வந்த அனுபவங்கள் பற்றியும் தனது மனைவியார் அனுராதா பற்றியும் கூறியது மிக நெகிழ்ச்சியாக இருந்தது. அவரது வார்த்தைகளுக்கும் எங்கள் மனதுக்குமான இடைவெளி குறைந்துகொண்டிருந்தது. என்னையும் அறியாமல் என் கண்கள் கலங்கிக்கொண்டிருந்தன(Empathy). அவரும் அவரது மனைவியும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காக செய்த செயல்களும், பார்த்த பிரபலங்கள் பற்றியும் கூறினார்.
வைரமுத்துவை சென்று பார்த்தபோது, அவர் இவர்களது வார்த்தைகளை கூட கேட்கவில்லையாம். கடைசியாக இவர்கள், "சரி உங்களுக்கு நேரமில்லை என்று நினைக்கிறோம், நாங்கள் உங்களுக்கு எழுதி அனுப்புகிறோம்" என்றதற்கு, வைரமுத்து, "எழுதுங்களேன்" என்றாராம். எனக்கு கள்ளிக்காட்டு இதிகாசம் நினைவுக்கு வந்தது. எல்லாம் எழுத்துவரைதான்.
இதற்குப்பிறகு பிகினிகளும், ஜோடிகளும் மனதைவிட்டு மறைந்தன. தினமும் 10 நிமிடமாவது இன்னும் அழுகிறேன் என்றபோது, ஆணின் அழுகை பற்றி எண்ணிப்பார்த்தேன். ஒவ்வொருவரையும் மிகவும் பாதிக்கும் விஷயம் தன் அப்பாவின் கண்ணீராகத்தான் இருக்கும். அந்த தருணத்தை கண்டிப்பாக உணர்ந்தோம்.
இன்னும் அனுராதா அவர்களை அவரது மகள் வீட்டில் உணர்கிறார் என்றார். கோவியார், அந்த அளவுக்கு அவர் உங்கள் உணர்வுகளில் வாழ்கிறார் என்றார். சுஜாதா கூறியது நினைவில் வந்தது.
"Nobody dies; they live in memories and in the genes of their children "
நிகழ்ச்சிக்கு புதிதாக வந்த பதிவு வாசகர் மீனாட்சி சுந்தரம், தனது அரசியல் ஆசைகளையும் தனது வருங்கால திட்டங்களையும் தெரிவித்தார். அவர் தன் கிராமத்து பஞ்சாயத்து தேர்தலில் தன் தந்தையை எதிர்த்து தோல்வி மன்னிக்கவும் வெற்றி வாய்ப்பை இழந்ததை தெரிவித்தார் (ஒரு நாயகன் உதயமாகிறான்)
அதற்குப்பின் சிறப்பு பதிவர் சாம்பார் மாஃபியா உரையாற்றினார். அவரது பெயரை யாரும் தயவு செய்து எழுதிவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். தைரியமாக எழுதியதால், ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அவருக்கு அனுப்பிய பாராட்டுகளை பற்றி கூறினார். மேலும் அவர் ஆங்கிலத்தில், இந்தியாவின் ஒரு முதுபெரும் பதிவர் என்ற தகவலையும் பகிர்ந்துகொண்டார்.
இவர் இட்லிவடை அணியில் இருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. அதே சமயம் சிங்கை நாதன் மீதும் இதே கேள்வி வீசப்பட்டது.
மிகவும் இருட்டிவிட்டதாலும், இட்லி லிட்டில் இந்தியாவில் ஆறிவிடும் என்ற காரணத்தினாலும் சந்திப்பை முடிவுக்கு கொண்டுவந்தார்கள்.
அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்த நேரத்தில் பதிவர் ராம் வந்து கலந்து கொண்டார். கையில் ஒரு கேமிராவுடன் கடற்கரைப்பக்கம் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்.
இடையில் பாரி அரசு, தனது திருமண அழைப்பிதழை கொடுத்தார். திருமணம் பட்டுக்கோட்டையில் நடைபெறுகிறது. அவருக்கு பாரதி மீது எதிர்ப்பாம், ஆனால் அவரது மாமனாருக்கு பயங்கர விருப்பாம் எனவே பெண் பெயரில்கூட பாரதி இருக்கிறது. எது எப்படியோ, விரைவில் பாரி அரசு பாரதி-தாசனாக மாறப்போகிறார். :)
சந்திப்பு முடியும் நேரத்தில் அகரம் அமுதன் வந்து இணைந்துகொண்டார். எனது பெயரை மிகவும் பாராட்டினார். இந்த தமிழ்ப்பெயர் மிகவும் பிடித்திருப்பதாகவும், முடிந்தால் தன் பெயரையும் மாற்றிக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். ;)
சந்திப்பு முடிந்ததும், லிட்டில் இந்தியாவின் இட்லிக்காக கோவியார் வேகமாக கிளம்பினார். செல்லும்போது முகவை மைந்தன், பார் அரசு மற்றும் அகரம் அமுதன் மூவரும் கம்பன் சீதையை வர்ணித்த விதம் பற்றி விவாதித்தனர். சந்திப்பிற்கு பிறகு எங்கு செல்ல திட்டமிட்டு இருந்தார்கள் என்பது சரியாக தெரியவில்லை.
கோவியார் எங்களை பேருந்து நிலையத்திற்கு வழிநடத்தினார். நாங்கள் ஏறிய பேருந்து 3 கி.மி தூரம் கூட இல்லாத தீவை கிட்டத்தட்ட கால்மணிநேரம் சுற்றிக்கொண்டிருந்தது. அனைவரும் ஒருவேளை சிங்கை செல்லாமல் வேறு எங்கோ செல்கிறதோ என்று எண்ண ஆரம்பித்தனர். என்னிடம் பாஸ்போர்ட் வேறு இல்லாதது சற்று சற்று கலக்கம் கொடுத்தது. :)
ஜோசப் அவர்கள் ஒரு ராஜபார்வை கண்ணாடியை போட்டுக்கொண்டு, "நான் கண்ணாடி போட்டால் செல்வராகவன், கழற்றினால் தனுஷ்" என்றெல்லாம் பன்ச் டயலாக் விட்டார். பின்னர், ஒரு அணி லிட்டில் இந்தியா சென்றது. அதன்பிறகு என்ன நடந்ததென்று தெரியவில்லை. எனக்கும் மகேஷுக்கும் இந்த நிகழ்வுகளை பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.
டிசம்பரில் புதுகை அப்துல்லா வருவதாக தெரிகிறது. அப்போது அடுத்த மெகா சந்திப்பு நடைபெறும் என்று நினைக்கிறேன்.
லேபிள் கொஞ்சம் பெரிசு, பதிவர் சந்திப்பு
Subscribe to:
Posts (Atom)