நம்ம அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கரண் தப்பாரிடம் CNN-IBN-ல் வசமாக மாட்டிக்கொண்டு வெளியிட்ட கருத்துகள் இப்போது CNN-IBN-கு ஹாட் டாபிக்காகி விட்டது.

அமைச்சர் பாட்டுக்கு சிவனேனு தாங்க இருந்தாரு, இந்த கரண் இருக்காரே ஏற்கனவே அவருக்கும் நிறைய அரசியல்வாதிகளுக்கும் வாய்க்கால் தகராறு இருக்கு(ஒருமுறை நம்ம ஜெயலலிதாவை முகம் சிவக்க வைத்தார் பின்பு தலைவர் மோடியை பேட்டி ஆரம்பிக்கும் முன்பே பெட்டி கட்ட வைத்தார்). கரணின் ஸ்டைலே எதிராளியை எமோஷனல் ஆக்கி அல்லது வெறுப்பேற்றி விஷயத்தை கறப்பதுதான். நிறைய முறை முதல் கேள்விக்கு பதில் அளிக்கும் முன் 10 கேள்விகள் கேட்டு எதிராளியை திணறடிப்பார். பலரின் முன்னேற்பாடுகளையும் ஒத்திகைகளையும் இது சல்லடையாக்கி ஆளை முடித்து விடும்.

இம்முறை அந்த அளவுக்கு அடி ஏதும் இல்லை. இருப்பினும் ஒவ்வொன்றாக அமைச்சரிடம் போட்டு வாங்கி, அமைச்சரிடம் இருந்து வார்த்தைகளை. அமைச்சர் நினைத்துகூட பார்க்கமுடியா அளவுக்கு ரஜினியை எல்லாம் இழுத்து ரகளை செய்திருக்கிறார் கரண்.

ஒரு கேள்வியில் "ஷாருக்கான் கிரிக்கெட் போட்டியின் போது சிகரெட் பிடித்ததை பற்றி என்ன கருதுகிறீர்கள்?" என்றார் கரண்.
அதற்கு அமைச்சர், "முழுக்க முழுக்க தேவையற்றது. என்ன அவசியம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்!!!

மேலும் பல ருசிகர கேள்விபதில்கள்
http://ibnlive.com/news/srk-puffs-out-ramadoss-no-smoking-appeal/57533-3.html

இவ்வளவு புரட்சிகளை(!) செய்து வரும் பா.ம.க தன் கட்சிக்குள் இவற்றை எந்த அளவு கடைபிடிக்கிறது? புகைப்பிடிப்போரை கட்சியை விட்டு நீக்கிவிடுமா?

இலங்கை எப்போதும் என் கனவுதேசமாகவே இருந்து வந்திருக்கிறது. அதிலும் இலங்கைத்தமிழ் மீது ஒரு மோகம். தெனாலி போன்ற படங்களும் இன்னும் சில கதைகளும் என் மோகத்தை அதிகரிக்கவே செய்தன.
இங்கு சிங்கப்பூர் வந்தவுடன், என் அலுவலகத்தில் இருவர் இலங்கையிலிருந்து வந்து மாட்டினர். என் நல்ல நேரம் இருவரும் தமிழர்களும் கூட. அவர்களுடன் பேச ஆரம்பித்தபின்தான் தெரிந்தது, இலங்கைத்தமிழை புரிந்து கொள்வதை விட அவர்களது accent -ஐ புரிந்துகொள்வது மெத்த கடினமாய் இருந்தது.

"உங்களுக்காக தமிழையும் translate செய்யவேண்டும் போல" என்று அவர்கள் கிண்டல் அடிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டேன். பின் முழுமூச்சுடன் இலங்கைத்தமிழை கற்க தலைப்பட்டேன்.

அந்த முயற்சியில் எனக்கு கிடைத்த சில புதிய சொற்கள் அல்லது பழைய வார்த்தைகளின் புதிய உபயோகங்கள் பின்வருமாறு:

இதில் இருக்கும் அர்த்தங்கள் தவறாய் இருப்பின் திருத்துக. அவ்விரு நண்பர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பில் வசிப்பவர்கள். எனவே சில/பல சிங்கள சொற்களும் கலந்து இருக்கலாம். உங்களிடம் இருக்கும் புதிய வார்த்தைகளையும் பின்னூட்டமிடவும்.

இலங்கை நம்ம ஏரியா
========== =============
கனக்க‍= நிறைய
சிரா= சூப்பர்
ஒரே சீன் = ஒரே சண்ட‌
ஒரே கேம் = ஒரே சண்ட‌
ஒன்று = ஒன்டு
என்று = என்டு ...
வடிவு = அழகு
சொறியன்= தொல்லை கொடுப்பவன்
சொறிவிஷயம் = மோசமான விஷயம்
பொடியன் = பையன்
பெட்டை = பெண்
சம்பல் = சட்னி
வெளிக்கிடலாம் = கிளம்பலாம்
இருக்கலாம் = உட்காரலாம்
பஞ்ஜியாருக்கு ‍ = அலுப்பாய் இருக்கு
எடுக்கனும் = வாங்கனும்
பகடி = கிண்டல்
தூசனம் = கெட்டவார்த்தை
பேந்து = பின்பு
கதைக்க = பேச‌
ஒழும்பவில்லை = எழவில்லை
ஓம் = ஆம்
சாட்டர் ‍= மோசமான‌
வருத்தம் = நோய்
துண்டு, சரக்கு = figure
மேலும் உது என்ற அருமையான வார்த்தை, உங்களிடம் மட்டும் நிலைத்திருக்கிறது

நன்றி கொண்டோடி,சயந்தன்,Paheerathan
திருத்தங்களுக்கும் மேல் விபரங்களுக்கும் மிக்க நன்றி

எப்படி மறக்கிறார்கள் சில விஷயங்களை?
எப்போதோ பள்ளியில் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்தபோது கிடைத்த பாராட்டுகளை!
பாஷை தெரியாத ஊரில் கிடைத்த சொந்த ஊர் சாப்பாட்டை!
பள்ளியில் இருந்து ம‌ருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது மெதுவாய் வலிக்காம‌ல் ஊசி போட்ட டாக்டரை!`
கல்லூரியில் ஒன்றாய் இருந்து விட்டு வேலைக்கு போனதும் நட்புகளை!
தோழனிடம் இருந்து திருடிய பொருட்களை!
காதலியுடன் செல்லும்போது ஆட்டோக்காரனிடம் வாங்கிய சில திட்டுகளை!
முதன்முதலில் மெளஸ் பிடித்து வரைந்த படத்தை!
2ரூபாய் டிக்கெட்டுக்கு 50ரூபாய்க்கு சில்லறை கொடுத்த கண்டக்டரை!
முதன்முதலில் பெண்களுக்கு முன் செல்ல வெட்கப்பட்ட கணத்தை!
இப்படித்தான் மறந்துகொண்டே செல்கிறோம்,
சில கணங்களை...

கங்குலி நீக்கம்

இந்திய அணியின் ஒருநாள் போட்டித்தொடர்களிலிருந்து கங்குலியும் ட்ராவிடும் நீக்கப்பட்டுள்ளனர். சொல்லப்படும் காரணம் இளமை புதுமை. எல்லாம் சரி தான். ஆனால் form-ல் இருக்கும் கங்குலியை நீக்குவது ஒரு சரியான முடிவாக இருக்கப்போவதில்லை. மேலும் அது அணியின் ஒற்றுமையை அடுத்த டெஸ்ட் போட்டியில் சிதைத்துவிடும் அபாயம் இருக்கிறது.

இந்நேரத்தில், இருக்கும் இளமை கூட்டணியின் செயல்திறமையையும் ஒருமுறை பரிசீலனை செய்வது நன்று. தோனி, அவர் கடைசியாக நன்றாக விளையாடியது எப்போதென்பதே நினைவில் இல்லா அளவுக்கு இருக்கிறது அவருடைய performance! அணித்தலைவரின் நிலையே இப்படி இருக்கும்போது மற்றவர்களை எப்படி அளவிடுவது?

கண்டிப்பாக இந்திய அணி ஒருநாள் முதியோர் இன்றி விளையாடும் நிலை வரத்தான் போகிறது, அதற்காக பயிற்சி கொடுப்பதும் சரி. கங்குலி போன்றோரை நீக்குவதும் சரி. ஆனால் எல்லாவற்றிற்கும் இடம் பொருள் ஏவல் பார்ப்பது நன்று.

இன்னொரு வீரர் ட்ராவிட், தற்சமயம் இவரது form கேள்விக்குறியாக இருப்பதால் இவரை ஒருநாள் போட்டியை விட்டு விலக்குவதில் பெரிதாய் ஒன்றும் கேள்வி எழப்போவதில்லை. ஆனால் இந்திய அணியை பல ஆட்டங்களில் தன் தோளில் சுமந்த ஒரு வீரரின் இறுதி நிலை இப்படி இருக்கும் என்று யாருமே எண்ணியிருக்க மாட்டார்கள். தற்பொதைய புதிய வீரர்கள் இதை ஒரு பாடமாக கொள்வது நன்று.

"இதுவும் கடந்து போகும்"

இப்பாடலின் வலியும் ஆனந்தமும் ஒரு அயல்நாட்டில் இருந்து சொந்த நாட்டை நினைத்து உருகுபவனால் மட்டுமே முழுமையாக புரிந்துகொள்ள முடியும்.
மேலும் ரஹ்மானின் குரல் ஒரு விதமான உணர்ச்சியை கொடுக்கும் இனிய‌ குரல். அது சில இடங்களில் சிறப்பாக பயன்படுத்தபடுகிறது. சில இடங்களில் அய்யோ(எல்லா புகழும்... ATM-‍லிருந்து)

(இப்போது அஸ்லாமின் குரல் கூட அருமையாக வந்துகொண்டு இருக்கிறது. அதை பற்றி இன்னொரு பதிவில்)

அப்படி எல்லாமே நன்றாக சேர்ந்து வந்த ஒரு பாடல் இது. தேசம் படத்தில் இருந்து.

உந்தன் தேசத்தின் குரல்
தொலை தூரத்தில் அதோ
செவியில் விழாதா?
சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்கிறது தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை
நிழல் போல் வராதா?
அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா

வானம் எங்கும் பறந்தாலும்
பறவை என்றும் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் என்றும் தாய் நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும்
அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
உள்மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?


கங்கை உனை அழைக்கிறது
யமுனை உனை அழைக்கிறது
இமயம் உனை அழைக்கிறது
பல சமயம் உனை அழக்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க‌
சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க‌
தென்னம் தோப்பு துறவுகள் அழைக்க‌
கட்டி காத்த உறவுகள் அழைக்க‌
நீ தான் தின்ன நிலாச்சோறு தான் அழைக்க‌


பால் போல் உள்ள வெண்ணிலவில்
பார்த்தால் சில குறை இருக்கும்
மலர் போல் உள்ள தாய் மண்ணில்
மாறாத சில வலி இருக்கும்
க‌ண்ணீர் துடைக்க வேண்டும் உந்த்ன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்பு தாயின் மடி உனை அழைக்குதே தமிழா

தமிழ்மணம்

குறைந்தது 3 பதிவுகளாவது வேண்டுமாம் பதிவு செய்துகொள்ள.
என்ன செய்வதென்று தெரியவில்லை பார்க்கலாம்...

அதற்காக இந்த கொசுறு பதிவு

கடவுளுடன் ஒரு பேட்டி

ஒரு இணையத்தளத்தில் நான் கண்ட ஒரு நல்ல article-ன் தமிழாக்கம்

ஒரு நாள், நான் கடவுளை பேட்டி காண்பதாய் நல்ல கனவு கண்டேன்.

"ஆக, நீ என்னை பேட்டி எடுக்க முடிவு செய்து விட்டாய்", என்றார் கடவுள்.

"உங்களுக்கு நேரம் இருந்தால்...", என்றேன் நான்.

கடவுள் சிரித்துக்கொண்டே, "என் நேரம் முடிவில்லாதது, என்ன கேள்விகளை யோசித்து வைத்திருக்கிறாய்? ", என்றார்.

"மனிதகுலத்தை பற்றி உங்களை எது வியக்கவைக்கிறது?"

"குழந்தை பருவத்தில் சலிப்படைந்து வளர ஆசைப்படுகிறார்கள், வளர்ந்ததும் மீண்டும் குழந்தையாக நினைக்கிறார்கள்"

"செல்வம் சேர்க்க, உடல் ந‌லத்தை அடகு வைக்கிறார்கள். பின்பு அதை மீட்டெடுக்க செல்வத்தை செலவழிக்கிறார்கள்!"

"வருங்காலத்தை பற்றிய பரபரப்பில், நிகழ்காலத்தை தொலைக்கிறார்கள். ஆனால் இரு காலத்தையுமே வீணடிக்கிறார்கள்"

"இறக்கவே போவதில்லை என்பது போல் வாழ்கிறார்கள், ஆனால் மாண்டபின் மீள்வதில்லை"

நிஜம் என்னை சுட்டது. நான் சற்று அமைதியானேன்

"...சரி உங்கள் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"

இதற்கு பின் வந்த பகுதிகள் அவ்வளவாக கவரவில்லை. எனவே, மாற்றம் செய்து உள்ளேன்

"எப்போதும் அவர்களுக்கு நான் இருக்கிறேன் அனைவருக்கும், எந்த வழியில் வந்தாலும், எல்லா வாசலிலும், என்று"

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

எங்கோ வெடிக்கும் குண்டுகளின் அதிர்வுகள்
தாய்நாட்டை தேடி அலையும் சில குரல்கள்
தன்னாட்டை தொலைத்து கொண்டிருக்கும் சிலர்
எல்லோரையும் வம்புக்கிழுக்கும் தெம்பு
ஜாதியையும் மதத்தையும் பேண்ட்விட்த்துக்குள் இழுத்துவிட்ட மேதாவிமடத்தனம்

இப்படி வலைப்பதிவில் எல்லாம் இருக்க
இனி,
நானும் பதிவிடுகிறேன்



Copyright 2006| Blogger Templates by GeckoandFly modified and converted to Blogger Beta by Blogcrowds.
No part of the content or the blog may be reproduced without prior written permission.